Friday 21 November 2014

தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தால் “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து, நடிகர் விஷால் நீக்கப்படுவார்” சரத்குமார் பேட்டி






“நடிகர் சங்கம் பற்றி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தால் நடிகர் விஷால் நீக்கப்படுவார்” என்று சங்க தலைவர் சரத்குமார் கூறினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நடிகர் விஷால், நடிகர் சங்கம் பற்றி புகார் தெரிவித்து இருப்பது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் என்ற அடிப்படையில் உங்கள் கருத்து என்ன? என நிருபர்கள் கேட்டதற்கு சரத்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

பாரம்பரியம் கொண்ட சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. நடிகர் சங்கம் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது. சிலருக்கு பதவி மோகம் வரும்போது என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு 4¼ கோடி ரூபாய் கடன் இருந்த போது சங்க தலைவர் என்ற அடிப்படையில் ஒரு மாத காலம் அலைந்து அதனை ரூ.1¼ கோடியாக குறைத்து, நடிகர்கள் பங்களிப்புடன் அதனை மீட்டெடுத்த பெருமை விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி ஆகியோரை சேரும்.

அப்போது நாங்கள் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் நடிகர் சங்க கட்டிடம் கடனில் அப்படியே மூழ்கி போயிருக்கும்.

கட்டிடம் கட்ட அனுமதி ஏன்?

அது மட்டும் இன்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி நடிகர் சங்கத்தின் நிதி கையிருப்பை ரூ.3½ கோடியாக உயர்த்தினோம். இந்த நிதியில் இருந்து நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

மீதி இருக்கும் நிதியின் மூலம் நடிகர் சங்கத்திற்கு நிரந்தர வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக திரைப்படத்துறையில் தொடர்புடைய சத்யம் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டுவதற்கு பொதுக்குழுவில் எடுத்த முடிவுபடி அனுமதி வழங்கினோம்.

இதில் நடிகர் சங்க நிதி ரூ.15 கோடி. சத்யம் நிறுவன நிதி ரூ.50 கோடியாகும். 29 வருடம் 11 மாதம் கழித்து இந்த கட்டிடத்தின் மதிப்பு ரூ.170 கோடியாக உயரும். மாதம் ரூ.24 லட்சம் வாடகை வரும். நடிகர் சங்கத்தில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட யாரும் எடுத்துச் செல்ல முடியாது. எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் மாட்டோம்.

விஷால் நீக்கப்படுவார்

நடிகர் சங்கம் மீது பூச்சி முருகன் என்பவர் வழக்குகள் போட்டு இருக்கிறார். ஆனால் பொதுக்குழுவில் அவர் என்ன செய்தார்? என்பதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மீது வழக்குகள் போடும் பூச்சி முருகனைப்பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் நடிகர் விஷால் நடிகர் சங்கம் மீது தவறான தகவல்களை பரப்பி வருவது வேதனையை ஏற்படுத்துகிறது.

நடிகர் சங்கத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களை செய்த வேலைகளை விளம்பரப்படுத்துவது இல்லை. ஆனால் எங்கள் மீது விமர்சனம் செய்கிறார்கள். நான் வம்புக்கு செல்ல மாட்டேன். ஆனால் வம்பு செய்து சண்டைக்கு வந்தால் விடமாட்டேன்.

பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் கேள்வி கேட்க கூடாது. நடிகர் விஷால், தொடர்ந்து நடிகர் சங்கம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்தால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

No comments:

Post a Comment